செய்திகள்
உன்னாவ் பெண் தீ வைத்து எரிப்பு- மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு
உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் எரிக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்திற்கு வரும்போது 5 பேர் அவரை உயிரோடு எரித்தனர். இதில் பலத்த காயமடைந்த அந்தப்பெண், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி இன்று பாராளுமன்றத்தில் எழுப்பியது. மக்களவையில் இன்று காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, பாஜக அரசை கடுமையாக சாடினார்.
‘ஒருபுறம் ராமர் கோவில் கட்டுகிறார்கள், மறுபுறம் சீதாவை எரிக்கிறார்கள். எங்கே செல்கிறது நாடு? பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் எரிக்கப்பட்டதில் அவர் 95 சதவீத தீக்காயம் அடைந்துள்ளார்’ என சவுத்ரி கூறினார்.
தொடர்ந்து பாஜக அரசை குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பிய காங்கிரஸ் எம்பிக்கள், சிறிது நேரத்தில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.