செய்திகள்
இந்திராணி முகர்ஜி

இந்திராணியால் கொல்லப்பட்டவர் மகள் ஷீனா போரா தான்: தடயவியல் அறிக்கையில் உறுதி

Published On 2019-11-21 02:54 GMT   |   Update On 2019-11-21 02:54 GMT
இந்திராணியால் கொல்லப்பட்டவர் அவரது மகள் ஷீனா போரா தான் என்று தடயவியல் அறிக்கையில் உறுதியாகி உள்ளது.
மும்பை :

மும்பையில் தனது சொந்த மகள் ஷீனாபோராவை கொலை செய்த வழக்கில் பிரபல தொலைக்காட்சி நிர்வாகி இந்திராணி முகர்ஜி, அவரது 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கொலைக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் சாம்ராய் ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

இந்திராணியின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை, ஷீனாபோரா முறை தவறி காதலித்ததால் இந்த படுகொலை நடந்ததாக கூறப்படுகிறது.

கொலையான ஷீனாபோராவின் உடலை எலும்புக் கூடாக ராய்காட் மாவட்டம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து போலீசார் மீட்டனர்.

பின்னர் இந்த கொலையில் உடந்தையாக இருந்ததாக பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.



நேற்று இந்த வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீட்கப்பட்ட உடலில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் ஆய்வு குறித்து அறிக்கையை தடயவியல் துறை நிபுணர் நேரில் ஆஜராகி வாக்குமூலமாக அளித்தார்.

அப்போது அவர், மீட்கப் பட்டவர் உடலின் வலது தொடை எலும்பில் மேற்கொண்ட ஆய்வில் கொலையானவர் இந்திராணி முகர்ஜிக்கு பிறந்தவர் தான் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் டி.என்.ஏ. மாதிரிகளும், இந்திராணி முகர்ஜியின் ரத்த மாதிரிகளுடன் ஒத்துப்போகிறது” என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் உயிரிழந்தது இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போரா என்பது உறுதியாகி உள்ளது. இது வழக்கின் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.

இந்த வழக்கில் கைதான அனைவரும் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News