செய்திகள்
அசாமில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் பலி
அசாமில் நண்பனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிய இளைஞர்கள் சென்ற கார் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
கவுகாத்தி:
அசாம் மாநிலம், கம்ருப் ரூலர் மாவட்டம் பைஹடா சர்லி பகுதியை சேர்ந்த 8 இளைஞர்கள் டேஸ்பூர் பகுதியில் நடைபெற்ற தங்களது நண்பனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
உதல்கிர் மாவட்டத்தின் ஆரஞ் ஹிலபில் என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுச்சாலை வழியாக வந்தபோது சாலையோரம் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரி மீது அவர்கள் வந்த கார் வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு அசாம் மாநில முதல்மந்திரி சர்பானந்தா சோனாவால் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.