செய்திகள்
மத்திய மந்திரி வாகனம் மீது காங்கிரஸ் ஆதரவாளர்கள் கல்வீச்சு
ராஜஸ்தானில் மத்திய இணை மந்திரி வாகனம் மீது காங்கிரஸ் ஆதரவாளர்கள் கற்கள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்தில் உள்ளது பாய்டூ தொகுதி. இப்பகுதியில் உள்ள ஒரு கோவிலின் சமய வழிபாட்டு நிகழ்ச்சிக்கு மத்திய விவசாய துறை இணை மந்திரி கைலாஷ் சௌத்ரி மற்றும் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி எம்.பி ஹனுமான் பெனிவால் ஆகியோர் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு கைலாஷ் சௌத்ரி வாகனத்தில் வந்தார். அப்போது அங்கிருந்த காங்கிரஸ் ஆதரவாளர்கள், கற்களை வீசி எறிந்தனர். இதில் மந்திரியின் வாகனமும் சில போலீஸ் ஜீப்களும் சேதமடைந்தன. இதையடுத்து போலீசார் காங்கிரசாரை அப்புறப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் இருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஹரிஷ் சௌத்ரி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய பெனிவால் மீது இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில வருவாய்துறை மந்திரி ஹரிஷ் சவுத்ரியின் சட்டமன்றத் தொகுதி பாய்டூ ஆகும். எம்.பி. பெனிவால், விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டோம் என காங்கிரஸ் ஆதரவாளர்கள் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.