செய்திகள்
பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்

34-வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு- தெலுங்கானா பஸ் ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வருவதில் சிக்கல்

Published On 2019-11-07 09:43 GMT   |   Update On 2019-11-07 09:43 GMT
தெலுங்கானா மாநில பஸ் ஊழியர்களின் போராட்டம் 34-வது நாளாக நீடிக்கும் நிலையில், போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வருவதற்கான சூழல் இல்லை.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்துக் கழக்ததை அரசுடன் இணைக்க வேண்டும், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த மாதம் 5-ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். 

அரசு விதித்த காலக்கெடுவுக்குள் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் பஸ் ஊழியர்களை தாங்களாகவே பதவி விலகியதாக அரசு எடுத்துக்கொள்ளும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக அறிவித்தார். 

எனினும் ஊழியர்கள் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்காலிக ஊழியர்கள், மாற்று நபர்களை வைத்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 34-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. பணிமனை மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

ஸ்டிரைக் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளில் முரண்பாடு இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.

போராட்டத்தின் இடையே ஊழியர்கள் சிலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலமும் அரங்கேறி உள்ளது. இன்று ஐதராபாத்தில் ஒரு ஊழியர் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசாங்கமும், போராட்டத்தை வழிநடத்தும் கூட்டு நடவடிக்கை குழுவும் தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பதால் போராட்டம் உடனடியாக முடிவுக்கு வருவதற்கான சூழல் இல்லை. 
Tags:    

Similar News