செய்திகள்
மகாராஷ்டிரா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி
மகாராஷ்டிராவில் சொகுசு பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் சடாரா மாவட்டத்தின் கரட் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலத்தை கண்டுகளித்துவிட்டு 47 பேர் கொண்ட ஒரு குழு சொகுசு பஸ்சில் மும்பை திரும்பி வந்து கொண்டிருந்தது.
மும்பை - புனே தேசிய நெடுச்சாலையின் ஹொபொலி பகுதியில் உள்ள அம்ருதஞ்சன் என்ற பாலத்தை கடந்த போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் 40 அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.