செய்திகள்
பஞ்சாபில் பயிர் கழிவுகளை எரித்த விவசாயிகளுக்கு அபராதம்
பஞ்சாப்பில் கோதுமை பயிர் கழிவுகளை எரித்து காற்று மாசு அதிகரிப்பதற்கு காரணமாக இருந்த 28 விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர்:
நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு மிகவும் அபாய கட்டத்தை ஏட்டியுள்ளது.
தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், அரியானா மற்றும் பஞ்சாபிலும் பனிமூட்டத்துடன் கூடிய காற்று மாசு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், அண்டை மாநிலமான பஞ்சாப்பில் கோதுமை பயிர்களின் கழிவுகளை விவசாயிகள் அதிக அளவில் எரிப்பதால் தான் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு உயர காரணமாக உள்ளது என பரவலான கருத்துக்கள் நிலவி வருகிறது.
இதனால், பஞ்சாப் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பதேகர் சாகிப் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்கள் நிலத்தில் உள்ள கோதுமை பயிர்களின் கழிவுகளை எரித்து காற்று மாசு அதிகமாக காரணமாக இருந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் பயிர் கழிவுகளை எரித்த 28 விவசாயிகளுக்கு மொத்தம் 92 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும், அந்த விவசாயிகளில் 21 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.