செய்திகள்
ப.சிதம்பரம்

43 நாள் சிறைவாசத்தில் 5 கிலோ அளவுக்கு உடல் மெலிந்தேன் - ப.சிதம்பரம் வேதனை

Published On 2019-10-18 15:25 GMT   |   Update On 2019-10-18 15:25 GMT
திகார் சிறைவாசத்தால் இருமுறை நோய்வாய்ப்பட்டு 5 கிலோ அளவுக்கு உடல் மெலிந்துப் போனதாக சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்தின் வக்கீல் குறிப்பிட்டார்.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்,  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

இன்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வழக்கறிஞர் துஷார் மேத்தாவுக்கும் சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபலுக்கும் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.

ப.சிதம்பரத்தை ஜாமீனில் விடுவித்தால் அவர் சாட்சிகளையும் சாட்சியங்களையும் கலைத்து விடுவார் என்பது சி.பி.ஐ. தரப்பின் தவறான அனுமானம் என்று கபில் சிபல் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.




கடந்த 43 நாட்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிதம்பரத்துக்கு இருமுறை உடல்நலக்குறைவு ஏற்பட்டு முதலில் 5 நாட்களும் பின்னர் 7 நாட்களும் அவர் நோய் எதிர்ப்புக்கான சிகிச்சை பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவரது உடல் எடையும் 73.5 கிலோவில் இருந்து 68.5 கிலோவாக குறைந்து விட்டதாக குறிப்பிட்ட கபில் சிபல், குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், தற்போது 74 வயதாகும் சிதம்பரத்தின் உடல்நிலை மேலும் பாதிக்கப்படலாம் என்றும் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபன்னா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்விடம் தெரிவித்தார்.

இதுபோன்ற வழக்குகளில் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்ட பலர் நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாக குறிப்பிட்ட  சி.பி.ஐ. வழக்கறிஞர் துஷார் மேத்தா, ஊழலுக்கு எதிராக பூஜ்ஜியம் அளவிலான சகிப்புத்தன்மை நிலவ வேண்டும் என்பதை நீதிமன்றம் கவனிக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News