செய்திகள்
உ.பி.யில் துணிகரம் - சொத்து தகராறால் பூசாரி, அவரது மனைவி சுட்டுக்கொலை
உத்தர பிரதேசத்தில் சொத்துத் தகராறு காரணமாக பூசாரி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள கலி மஹால் பகுதியை சேர்ந்த உபாத்யாய. இவர் பூசாரியாக உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த உபாத்யாயவை பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் அவரது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சம்பவத்தில் பூசாரி மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் அப்பகுதியை விட்டு உடனடியாக தப்பிச்சென்றனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த பூசாரி மற்றும் அவரது மனைவியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சொத்துத் தகராறு காரணமாக பூசாரியின் சகோதரர்களே இந்த கொலைகளை செய்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.