சித்தூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலி
ஸ்ரீகாளஹஸ்தி:
சித்தூர் அடுத்த பெத்தபஞ்சாணி மண்டலம் பெதகாளே பகுதியை சேர்ந்தாவர் ரமேஷ். இவருடைய மகன் ரோஹித்குமார் (7). அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். ரோஹித்குமாருக்கு ஒரு மாதமாக கடும் காய்ச்சல் இருந்தது. பலமநேர், புங்கனூர் உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தும், காய்ச்சல் குணமாவில்லை.
15 நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் சிந்தாமணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அங்கு அவனுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவனுக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 4 நாட்களுக்கு முன்பு கோலார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஹித்குமார் பரிதாபமாக இறந்தான்.
அதேபோல் சித்தூர் மாவட்டம் கார்வேட்டி நகர மண்டலம் கத்திரப்பளே பி.சி.காலனியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, விவசாயி. இவருடைய மனைவி கவிதா (34). இவர் ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார், வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கவிதா பரிதாபமாக இறந்தார்.