செய்திகள்
மும்பை பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்- சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளி உயர்வு

Published On 2019-09-20 08:36 GMT   |   Update On 2019-09-20 08:36 GMT
தொழில் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்படைந்து சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
புதுடெல்லி:

கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், ஆட்டோமொபைல், உலோகம் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பான பங்குகள் சரிந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது.

இன்று காலையிலும் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. அதன்பின்னர், உள்நாட்டு நிறுவனங்களுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வரிச் சலுகை அறிவித்ததையடுத்து, பங்குச்சந்தையில் எழுச்சி ஏற்பட்டது. வரிச்சலுகை அறிவிப்பு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த, பங்குகள் வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கியது.



சில நிமிடங்களில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்ந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 460 புள்ளிக்கு மேல் உயர்ந்தது. அதன்பின்னரும் வர்த்தகம் ராக்கெட் வேகத்தில் சென்றது.

மதிய நிலவரப்படி சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 38 ஆயிரத்து 119 புள்ளிகளுடனும், நிப்டி 600 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 314 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்றது.

இதன்மூலம் இந்திய பங்குச்சந்தைகளில், 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News