செய்திகள்
நவீன் பட்நாயக்

ஒரே நாளில் 16 அரசு ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தார் ஒடிசா முதல்வர்

Published On 2019-09-14 09:42 GMT   |   Update On 2019-09-14 09:42 GMT
ஒடிசா மாநிலத்தில் ஊழல் வழக்குகளில் ஈடுபட்டு தண்டனை பெற்றதையடுத்து ஒரே நாளில் மட்டும், 16 அரசு அதிகாரிகளை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் அரசு உயர்பதவிகளில் உள்ளவர்கள் லஞ்சம், ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டு சிக்கிக்கொண்டால் அவர்களைப் பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிப்பதுதான் இதுவரை அதிகபட்ச தண்டனையாக இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து ஒடிசா அரசின் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றதையடுத்து இன்று(நேற்று) ஒரு நாளில் மட்டும் 16 அரசு அதிகாரிகளை பணியிலிருந்து முழுவதுமாக விடுவித்து பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஒடிசா அரசு கடந்த ஒரு மாதத்தில் இதுபோன்ற பணிநீக்க உத்தரவுகளை 37 பேருக்கு வழங்கியுள்ளது.

பல்வேறு ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின்னர் அரசு ஊழியர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 பொறியாளர்கள், 5 தலைமை ஆசிரியர்கள், 2 வருவாய் ஆய்வாளர்கள், 1 மருந்தாளர், அமீன், பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மற்றும் 2 எழுத்தர்கள் உட்பட 16 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த ஒரு மாதத்தில் இதுபோன்ற 3-வது நடவடிக்கை ஆகும். இதில் மொத்தம் 37 அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு 6 ஊழியர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.

அரசுப்பணிகளில் இருப்போர் லஞ்சம் உள்ளிட்ட முறைகேடான காரியங்களில் ஈடுபடுவதை முதல்வர் நவீன் பட்நாயக் கடுமையாக எதிர்க்கிறார். இனியும் லஞ்சம் பெறலாம் என நினைக்கும் அரசு பணியாளர்களுக்கு இத்தண்டனை ஒரு முன்னுதாரணமாக அமையும்

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News