செய்திகள்
ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்தில் இங்கிலாந்து பேராயர் வருத்தம்
10 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்தை சேர்ந்த கான்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்தில் படுகொலைக்கு மன்னிப்பு அளிக்கக்கோரி பிரார்த்தனை செய்தார்
அமிர்தசரஸ்:
‘‘ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்குமாறு இங்கிலாந்து அரசை வற்புறுத்துவீர்களா?’’ என்று கேட்டதற்கு, ‘‘இங்கிலாந்து அரசிடம் என்னால் பேச முடியாது’’ என்று அவர் கூறினார்.
கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ராணுவம் சுட்டுக்கொன்றது. அந்த சம்பவம் நிகழ்ந்து, நூறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த கான்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி, 10 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் நேற்று ஜாலியன்வாலா பாக்குக்கு சென்றார். அந்த படுகொலைக்கு மன்னிப்பு அளிக்கக்கோரி பிரார்த்தனை செய்தார்.
அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்தை பதித்தார். அதில், ‘‘நூறு ஆண்டுகளுக்கு முன்பு கொடிய செயல் நடந்த இந்த இடத்துக்கு வந்தது, தாழ்மையான அனுபவமாக இருந்தது. மிகவும் அவமானத்தை அளிப்பதாக உள்ளது. இதன்மூலம் பாடம் கற்றுக்கொண்டு, வெறுப்பை கைவிட்டு, இணக்கமாக வாழ உறுதி ஏற்போம்’’ என்று அவர் கூறியுள்ளார்.
‘‘ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்குமாறு இங்கிலாந்து அரசை வற்புறுத்துவீர்களா?’’ என்று கேட்டதற்கு, ‘‘இங்கிலாந்து அரசிடம் என்னால் பேச முடியாது’’ என்று அவர் கூறினார்.