செய்திகள்
காசநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் ஆனந்திபென் படேல்

காசநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை தத்தெடுத்த உ.பி. கவர்னர்

Published On 2019-08-26 08:03 GMT   |   Update On 2019-08-26 08:03 GMT
உத்தரபிரதேச மாநில கவர்னரான ஆனந்திபென் படேல், காசநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை தத்தெடுத்துள்ளார்.
லக்னோ:

மத்தியபிரதேச மாநில கவர்னராக இருந்த ஆனந்திபென் படேல், உத்தரபிரதேச மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து லக்னோவில் கவர்னர் பதவி ஏற்பு விழா நடந்தது. 

இதில் அலகாபாத் தலைமை நீதிபதி கோவிந்த் மதூர், ஆனந்திபென் படேலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

உபி கவர்னராக பொறுப்பேற்றது முதலே சிறப்பாக பணியாற்றி வரும் ஆனந்திபென் படேல், காசநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை தத்தெடுத்துள்ளார். அவருடன் சேர்ந்து கவர்னர் அலுவலர்களும் 21 காசநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர். 



இதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சரியான மற்றும் சத்தான உணவு கிடைக்கும். ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள முடியும். முன்னதாக பிரதமர் மோடி, காசநோய் அற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என கூறியிருந்ததை குறிப்பிட்டு ஆனந்திபென் படேல் பேசினார். 

இதைத்தொடர்ந்து ஆனந்திபென் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘குழந்தையை தத்தெடுப்பது கடமை அல்ல. சமூகத்திற்கு உதவக்கூடிய முக்கியமான பொறுப்பு.  வசதி படைத்தவர்கள் மக்களின் முக்கிய தேவைகளுக்காக செலவிடலாம். இதுபோன்ற சிறிய உதவிகள்தான் பெரிய இலக்கை அடைய உதவும்’ என பதிவிட்டுள்ளார்.














Tags:    

Similar News