செய்திகள்
டெல்லியில் ரூ.600 கோடி ஹெராயின் பிடிபட்டது - சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேர் கைது
தெற்கு டெல்லியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு, 5 பேர் கைதாகினர்.
புதுடெல்லி:
டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தெற்கு டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் பகுதியில் ஹெராயின் என்ற வீரியம் மிக்க போதைப்பொருளை கைமாற்ற சிலர் கொண்டு செல்வதாக போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆஷ்ரம் மேம்பாலம் பகுதியில் நேற்று முன்தினம் பின்னிரவு அதிகாரிகள் மாறுவேடத்தில் காத்திருந்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக கடந்து சென்ற விலையுயர்ந்த சொகுசு கார்களை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது ஒரு சொகுசு காரில் மறைத்து வைத்திருந்த 600 கோடி ரூபாய் மதிப்பிலான 150 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்து அதை கொண்டுவந்த 5 பேரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்திவரும் ஹெராயினை பதப்படுத்தி, சேமித்து வைக்கும் இடத்தையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.