செய்திகள்

சிறை கைதி மரண வழக்கு -28 ஆண்டுகளுக்குப்பிறகு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

Published On 2019-06-20 09:02 GMT   |   Update On 2019-06-20 09:13 GMT
குஜராத்தில் சிறை கைதி மரணம் அடைந்த வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஜாம்நகர்:

குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் கடந்த 1989ம் ஆண்டு காவலராக பணிப்புரிந்தவர் சஞ்சீவ் பட். அவர் பணியாற்றியபோது மத கலவரத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில்  அடைத்தார்.

இந்த கலவரத்தில் கைதானவர்கள் பின்பு விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவர்களுள் பிரபுதாஸ் வைஷ்னானி என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த நபர் உயிரிழந்ததற்கு காரணமே சஞ்சீவ் பட்தான் என கடந்த 1990ம் ஆண்டு பிரபுதாசின் சகோதரர்  ஜாம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



இதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உள்ளிட்ட 7 காவலர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார். பிரபுதாஸ் சிறை காவலில் இருந்தபோது இவர்கள் 7 பேரும் துன்புறுத்தியதால்தான் பிரபுதாஸ் இறந்ததாக வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் 11 பேரை கூடுதல் சாட்சியாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் சஞ்சீவ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் ஜாம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினர்.

Tags:    

Similar News