செய்திகள்

பலவீனமடைந்த வாயு புயல் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தை கடந்தது

Published On 2019-06-18 09:24 GMT   |   Update On 2019-06-18 09:24 GMT
குஜராத் மாநிலத்தை மிரட்டிவந்த வாயு புயல் பலவீனமடைந்து இன்று கட்ச் மாவட்டத்தின் கடற்கரை பகுதி வழியாக கரையை கடந்தது.
அகமதாபாத்:

அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தை நோக்கி நகர்ந்து கடந்த 13-ந் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தப் புயல் திசைமாறி கடலோர பகுதியையொட்டி மேற்கு நோக்கி நகர்ந்தது.
 
திடீரென ‘வாயு’ புயல் மீண்டும் திசைமாறி குஜராத் கடற்கரை பகுதி நோக்கி திரும்பியது. எனினும் புயல் வலுஇழந்து தாழ்வழுத்த மண்டலமாக மாறி போர்பந்தரில் இருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் நேற்று முன்தினம் காலை கடல்பகுதியில் மையம் கொண்டிருந்தது.  மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் நோக்கி நகர்ந்தது.



இந்நிலையில், மிகவும் பலவீனமடைந்த வாயு புயல் கட்ச் மாவட்டத்தின் கடற்கரை பகுதி வழியாக இன்று காலை கரையை கடந்தது. புயலினால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாவிட்டாலும் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் மாவட்டத்தில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் இன்று மாலை வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முன்னர் குஜராத்தில் உள்ள துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை விலக்கப்பட்டுள்ளது. ஆனால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்ற தடை மட்டும் நாளைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News