செய்திகள்

சொல்லியடித்த நவீன் பட்நாயக்- பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு

Published On 2019-05-27 16:33 GMT   |   Update On 2019-05-27 16:33 GMT
ஒடிசா முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ள நவீன் பட்நாயக், பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி 112 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். நாளை மறுநாள் காலை 10.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்படுகின்றன.

நவீன் பட்நாயக் தனது பதவியேற்பு விழாவிற்காக நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்ளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கும் அழைப்பு அனுப்பி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஒடிசாவில் மோடி பிரசாரம் செய்தபோது, நவீன் பட்நாயக் ஆட்சி அகற்றப்படும் என்றும், அடுத்து பாஜக அரசு பதவியேற்பு விழாவிற்காக ஒடிசாவிற்கு வருவதாகவும் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் ஏற்கனவே மெஜாரிட்டியை உறுதி செய்துவிட்டதாகவும், புதிய பிஜு ஜனதா தளம் அரசு பதவியேற்பு விழாவிற்கு மோடி வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். 

அவர் கூறியபடி, பிஜு ஜனதா தளம் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில்,  மோடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News