செய்திகள்

பீகாரில் தோழியை கிண்டல் செய்த 15 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற சக நண்பர்கள்

Published On 2018-09-29 19:55 GMT   |   Update On 2018-09-29 19:55 GMT
பீகார் மாநிலத்தில் தோழியை கிண்டல் செய்த 15 வயது சிறுவனை சக நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா :

பீகார் மாநிலம், பாட்னாவின் புறநகர் பகுதியை சேர்ந்த சத்யம்(15) எனும் சிறுவன் கடந்த 27-ம் தேதி கடத்தப்பட்டார். அதே தேதியில் ஹோமியோபதி மருத்துவராக உள்ள மாணவனின் தந்தைக்கு போன் செய்த கடத்தல்காரர்கள் ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால், பதற்றமடைந்த சிறுவனின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். சிறுவனை போலீசார் தேடி வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஆர்.பி.எஸ் கல்லூரி வளாகத்தில் இருந்து சிறுவனின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் சிறுவனின் சக நண்பர்கள் மூன்று பேரை கைது செய்தனர்.

உயிரிழந்த சிறுவன் சத்யம், தங்களின் தோழி ஒருவர் மற்றும் அப்பகுதி பெண்கள் சிலரை கிண்டல் செய்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் கடத்தி கொலை செய்ததாக கைதான 3 சிறுவர்களும் விசாரணையின் போது போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் சத்யம் கடந்த 27-ம் தேதி டியூஷன் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது நண்பர்கள் மூவரும் சேர்ந்து அவரை கடத்தியுள்ளனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் வைத்து சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர். மயங்கியதும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்தி இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். சிறுவன் ஒருவனை மூன்று சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News