செய்திகள்

ஐதராபாத் நிஜாம் பயன்படுத்திய தங்க டிபன் பாக்ஸ் மீட்பு - திட்டம் போட்டு திருடிய இருவர் கைது

Published On 2018-09-11 10:02 GMT   |   Update On 2018-09-11 10:02 GMT
ஐதராபாத் நிஜாம் பயன்படுத்திய தங்க டிபன் பாக்ஸ், டீ-கப், ஸ்பூன் ஆகியவை அருங்காட்சியகத்தில் இருந்து திருடு போன நிலையில், நேற்றிரவு மேற்கண்ட பொருட்களை போலீசார் மீட்டனர். #HyderabadNizam
ஐதராபாத்:

சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் பல குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது ஐதராபாத் நிஜாம் மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. கடைசியாக 7-வது நிஜாம்உஸ்மான் அலிகான் பகதூர் ஆவார். அவருக்கு பின் நாடு சுதந்திரம் பெற்று ஐதராபாத் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

நிஜாம் மன்னர்கள் அரண்மனையில் பயன்படுத்திய பொருட்கள் ஐதராபாத்தில் புரானி ஹவேலியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடைசி நிஜாம் பயன்படுத்திய தங்கத்தால் ஆன 5 அடுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் தங்க டீ கப்-சாசர், தங்க ஸ்பூன் ஆகியவையும் இடம்பெற்று இருந்தது. இவை விலைமதிப்பற்றது.

இந்த தங்க டிபன் பாக்ஸ் மற்றும் டீ கப்-சாசர், ஸ்பூன் ஆகியவை கடந்த 4-ம் தேதி திருடு போனது. மியூசியத்தின் 2 அடி அகலம் கொண்ட வென்டிலேட்டர் வழியாக கயிறுகட்டி உள்ளே இறங்கி வந்த கொள்ளையர்கள் பொருட்களை கொள்ளையடித்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நேற்றிரவு 2 கொள்ளையர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்து தங்க டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நண்பர்களான இரண்டு கொள்ளையர்களும் கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு திருடியுள்ளதாக போலீஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News