செய்திகள்

குடகு மாவட்டத்திற்கு மத்திய அரசு ரூ.100 கோடி வெள்ள நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் - குமாரசாமி கோரிக்கை

Published On 2018-08-21 03:37 GMT   |   Update On 2018-08-21 03:37 GMT
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு மத்திய அரசு ரூ.100 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #KodaguRain #KarnatakaCM
பெங்களூரு:

கர்நாடக முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கேரள மாநிலத்திற்கு நிவாரண உதவியாக ரூ.500 கோடி வழங்குவதாக பிரதமர் அறிவித்திருந்தார். அதே போல் கர்நாடக மாநிலத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு குறைந்தது ரூ.100 கோடி வழங்குவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்காக நாங்கள் மத்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். வெள்ளத்தால் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய வேண்டும். நாங்கள் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவியை பெற்று வருகிறோம்.



மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தில் நான் 2 நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டேன். பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். 845 வீடுகள் முழுவதுமாகவும், 773 வீடுகள் பாதி அளவும் சேதம் அடைந்துள்ளன. மொத்தம் 6620 பேர் வெள்ளத்தில் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிவாரண முகாம்களுக்கு பால், உணவு வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

குடகு மாவட்டத்திற்கு தேவையான வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தேவையான நிதியை மத்தியில் ஆளும் பாஜக அரசு வழங்க வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வராவும் கூறியுள்ளார். #KodaguRain #KarnatakaCM
Tags:    

Similar News