செய்திகள்
நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் - மத்திய மந்திரி சத்யபால் சிங்
மருத்துவ படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவு தேர்வான நீட் தேர்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இணை மந்திரி சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். #NEETexam
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள எய்ம்ஸ், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரிகள் நீங்கலாக இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை தேர்வை ஆண்டு தோறும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு பிறகு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
இதற்கிடையே, நீட் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக எழுதுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இம்மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சத்யபால் சிங், நீட் தேர்வுகள் இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்காக, கம்பூட்டர் லேப் உள்ள பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. மேலும், நீட் தேர்வை போலவே ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் ஜெஇஇ மெயின் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். #NEETexam