செய்திகள்
அமர்நாத் யாத்திரை - பக்தர் உயிரிழப்பு, பலி எண்ணிக்கை 35-ஆக உயர்வு
அமர்நாத் யாத்திரை சென்ற பீகாரை சேர்ந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த ஆண்டின் யாத்திரை காலத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. #AmarnathYatra
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.
இதற்கிடையில், சாலை விபத்து மற்றும் மாரடைப்பு காரணமாக சில பக்தர்களும் அவர்களுக்கு உதவியாக இருந்த சேவகர்களும் இந்த ஆண்டு யாத்திரை காலத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பீகாரை சேர்ந்த ராதா என்னும் 67 வயது பெண்மணி யாத்திரை மேற்கொள்வதற்காக பல்தால் அடிவார முகாமில் காத்திருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவருடன் சேர்த்து இந்த ஆண்டின் யாத்திரை காலத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. #AmarnathYatra