செய்திகள்
கைது செய்யப்பட்ட ஆரியா- அனிஷ்.

7 வயது சிறுமியின் உடலில் 15 இடங்களில் சூடு போட்டு சித்ரவதை: தந்தை- சித்தி கைது

Published On 2018-07-25 04:54 GMT   |   Update On 2018-07-25 04:54 GMT
கொல்லம் அருகே படுக்கையில் சிறுநீர் கழித்த 7 வயது சிறுமியின் உடலில் 15 இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்த தந்தை மற்றும் சித்தியை போலீசார் கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கருணாகம்பள்ளியை சேர்ந்தவர் அனிஷ் (29) லாரி டிரைவர். இவரது 2-வது மனைவி ஆரியா (21). சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர்.

இவர்களுக்கு அருகில் அனிஷின் முதல் மனைவி மகள் 7 வயது சிறுமி தூங்கி கொண்டு இருந்தார். அவள் படுக்கையில் சிறுநீர் கழித்தாக கூறப்படுகிறது.

இதனால் ஆரியா ஆத்திரம் அடைந்தார். ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்து அதில் தோசை கரண்டியை பழுக்க வைத்து எடுத்து வந்து சிறுமியின் உடலில் 15 இடங்களில் சூடுவைத்தார். இதற்கு கணவர் அனிசும் உடந்தையாக இருந்துள்ளார். 15 இடங்களில் சூடு வைத்ததால் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறினாள்.

அவளை கணவன்-மனைவி மிரட்டி உள்ளனர். உடலில் சூடு வைத்தது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என எச்சரித்து உள்ளனர். இதனால் சிறுமி இதனை யாரிடமும் சொல்லவில்லை. சிறுமி உடலில் ஏற்பட்ட காயத்துக்கு ஆரியா தேன் மட்டும் தடவி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று சிறுமி தான் படிக்கும் கருணாகம்பள்ளி அரசு பள்ளிக்கு வழக்கம் போல் சென்றார். உடலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவர் வலியால் துடித்தார். இதனை பார்த்த வகுப்பு ஆசிரியை சிறுமியிடம் விசாரித்தார்.

அப்போது சிறுமி தனக்கு சூடு வைத்த தகவலை தெரிவித்தார். இது குறித்து கருணாகம்பள்ளி போலீசுக்கும், சிறுவர் காப்பக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் மற்றும் சிறுவர் காப்பக அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். சிறுமியை மீட்டு அங்குள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கருணாகம் பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் குமார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை அனிஷ், சித்தி ஆரியா ஆகியோரை கைது செய்தார்.

7 வயது சிறுமி சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News