செய்திகள்

வரதட்சணை கொடுமை- மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை

Published On 2018-07-16 08:11 GMT   |   Update On 2018-07-16 08:11 GMT
வரதட்சணை கொடுமையால் விமான பணிப்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புதுடெல்லி:

தெற்கு டெல்லியில் பஞ்சசீல் பார்க் பகுதியை சேர்ந்தவர் அனீசியா பத்ரா (39). இவர் ஜெர்மனியின் லுப்தான்சா நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக இருந்தார்.

இவரது கணவர் மாயங்க் சிங்கி. டெல்லி அருகேயுள்ள குர்கானில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிகிறார். இந்த நிலையில் வீட்டின் மாடிக்கு சென்று அனீசியா பத்ரா திடீரென கீழே குதித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த அனீசியா பத்ராவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுகுறித்து அவரது கணவர் மாயங்க் சிங்கி போலீசில் புகார் செய்தார். அதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் தற்கொலை செய்வது குறித்து மனைவி தனக்கு ‘எஸ்.எம்.எஸ்.’ எனப்படும் குறுந்தகவல் அனுப்பியதாகவும், உடனே மாடிக்கு விரைந்து சென்று தடுப்பதற்குள் அவர் கீழே குதித்து தற்கொலை செய்ததாகவும் கூறினார்.

அனீசியா பத்ராவின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். இவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டார் என கூறியுள்ளார்.

அனீசியாபத்ராவுக்கும், மாயங்க்சிங்விக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அதில் இருந்தே வரதட்சணை கேட்டு அனீசியா பத்ராவை மாயங்க் சிங்வி கொடுமைப்படுத்தி வந்தார். அடிக்கடி மது அருந்தி வந்து அடித்து உதைத்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கொடுமை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News