விபத்தில் பலியானவருக்கு இழப்பீடு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
கொழிஞ்சாம்பாறை:
கன்னியாகுமரியை சேர்ந்த சிலர் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந்தேதி கேரளாவுக்கு காரில் சுற்றுலா சென்றனர். அவர்கள் காகளம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இதில் விஜயகுமார் (வயது 35) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அம்பலப்புழா போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர் வழக்குப்பதிவு செய்தார். விபத்தில் குணமடைந்த நண்பர்களில் ஒருவரான பபீஸ் என்பவர் விபத்து வழக்கு குறித்து அடிக்கடி போலீஸ் நிலையத்திற்கு சென்று வந்தார்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் விபத்தில் இறந்த விஜயகுமார் மற்றும் காயம் அடைந்த 4 பேருக்கும் அதிக பட்சம் காப்பீட்டு தொகை பெறும் வகையில் வழக்கை மாற்றி எழுதுகிறேன் என்றும் அதற்கு தலா ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும். வாங்கி கொடுக்கும் நீங்கள் உங்கள் கணக்கிற்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று கூறினார்.
இதைகேட்ட பபீஸ் அதிர்ச்சியடைந்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பபீஸ் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ரேக்ஸ் கோபிஸ் அரவியை சந்தித்து புகார் தெரிவித்தார். புகாரையடுத்து நேற்று ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பபீசிடம் கொடுக்கப்பட்டது.
பணத்தை பெற்றுக்கொண்ட பபீஸ் போலீஸ் நிலையத்திற்கு வந்து இன்ஸ்பெக்டர் கபீரிடம் கொடுத்தார். பணத்தை வாங்கி அவர் பாக்கெட்டில் வைத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இன்ஸ்பெக்டரை கையும், களவுமாக பிடித்தனர். இன்ஸ்பெக்டரை கைது செய்த அதிகாரிகள் அவரை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.