செய்திகள்

கர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு

Published On 2018-05-16 17:35 GMT   |   Update On 2018-05-16 17:35 GMT
கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அம்மாநில கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. #KarnatakaElection #KarnatakaCMRace #BJP #Congress

பெங்களூர்:

கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மாலை 5 மணியளவில் குமாரசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜ்பவனில் நாளை காலை 9.00 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளார். பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அம்மாநில கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்பார் என்பதால் அதற்கு முன்னதாக வழக்கை விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மனுவை அவசர வழக்காக இரவே விசாரிக்க, தலைமை நீதிபதியிடம் நேரம் கேட்குமாறும் பதிவாளரிடம் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். #KarnatakaElection #KarnatakaCMRace #BJP #Congress
Tags:    

Similar News