ராஜ்தானி, தூரந்தோ ரெயில் பயணிகளுக்கு கூடுதலாக ஒரு குடிநீர் பாட்டில் இலவசம்
புதுடெல்லி:
ராஜ்தானி, தூரந்தோ, சதாப்தி ஆகிய ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தற்போது ரெயில் நிலைய குடிநீர் பாட்டிலும், அதை அருந்துவதற்கு தேவையான கப்பும் அளிக்கப்படுகிறது. ரெயில் பெட்டியில் பயணிகள் ஏறி அமர்ந்ததும் அவர்களுக்கு குடிநீர் பாட்டில் வழங்கப்படுகிறது.
இந்த ரெயில்கள் திட்டமிட்ட நேரத்திற்குள் செல்லாமல் தாமதமாக செல்லும் நிலையில் 20 மணி நேரத்துக்கும் அதிகமாக பயணிக்கும், பயணிகளுக்கு கூடுதலாக ஒரு குடிநீர் பாட்டில் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ரெயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், ‘‘2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக ராஜ்தானி, தூரந்தோ, சதாப்தி ரெயில்கள் செல்லும் பட்சத்தில் அதில் பயணிப்போருக்கு இலவசமாக ஒரு குடிநீர் பாட்டில் அளிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி-ஹவுரா இடையே ராஜ்தானி ரெயில் 19 மணி நேரம் பயணம் செய்கிறது. அந்த ரெயில் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக செல்லும் பட்சத்தில் அதில் இருக்கும் பயணிகளுக்கு இலவசமாக குடிநீர் பாட்டில் வழங்கப்படும். இதே போல் தூரந்தோ, சதாப்தி ரெயில்கள் 2 மணி நேரம் தாமதமானாலும் அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கும், குடிநீர் பாட்டில் வழங்கப்படும். #tamilnews