செய்திகள்

ஷீனா போரா கொலை வழக்கு குற்றவாளி இந்திராணி முகர்ஜி மருத்துவமனையில் அனுமதி

Published On 2018-04-06 23:59 GMT   |   Update On 2018-04-06 23:59 GMT
டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். #IndraniMukerjea
மும்பை:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி (43), தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டார். இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் உள்ளிட்டோருக்கு பிறந்ததாக கூறப்படும் ஷீனா போராவை அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, நிதி பிரச்சனை காரணமாக கொலை செய்துள்ளார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்திராணி முகர்ஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து அவரது இரண்டாவது கணவர் என்று கூறப்படும் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுனர் ஷியாம்வர் ராய் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது மும்பை பைகுல்லா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில். ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்திராணி முகர்ஜிக்கு நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர். #SheenaBora #IndraniMukerjea #Tamilnews
Tags:    

Similar News