செய்திகள்
பிரபல கன்னட கவிஞர் குவெம்புவின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்
மறைந்த கன்னட கவிஞர் குவெம்புவின் 114-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுளின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது. #Kuvempu #Googledoodle
புதுடெல்லி:
குவேம்பு என்ற புனைப்பெயராலும் சுருக்கமாக கே.வி.புட்டப்பா என்றும் பரவலாக அறியப்படுபவர் குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா. இவர் 1904-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி கர்நாடகா மாநிலம், ஷிமோகா மாவட்டத்திற்குட்பட்ட குப்பாலியில் பிறந்தார். தனது கல்லூரி படிப்பை மைசூரிலுள்ள மஹாராஜா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அதே கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
இவர் கன்னட எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். கன்னடமொழியில் ஞானபீட விருது பெற்ற முதல் நபர் ஆவார். புட்டப்பா தமது ஆக்கங்கள் அனைத்தையும் குவேம்பு என்ற புனைப்பெயரிலேயே எழுதியுள்ளார். இவர் இராஷ்ட்ரகவி என்றும் பாராட்டப்படுகிறார்.
இவர் இராமாயணக் இதிகாசத்தை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தர்சனம் என்னும் பெயரில் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். கருநாடக மாநில நாட்டுப்பண்ணான "ஜெய பாரத ஜனனீய தனுஜாதே" இவர் எழுதியதாகும். இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன் மற்றும் பத்ம விபூசண் விருதுகள் வழங்கியுள்ளது.
இவர் வென்ற விருதுகள்: ஞானபீட விருது - 1967, பத்ம பூசன் - 1958, சாகித்திய அகாதமி விருது - 1955, தேசிய கவி - 1964, ஆதிகவி பம்பா விருது - 1987, பத்ம விபூசண் - 1988, கர்நாடக ரத்னா - 1992
1994-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி மரணமடைந்த குவேம்புவை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளான இன்று அவரது புகைப்படம் கொண்ட ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது.
குவெம்பு-வின் மறைவுக்கு பிறகு ஷிமோகா மாவட்டத்தில் குப்பாலி கிராமத்தில் அவர் வாழ்ந்த வீடு, நினைவு இல்லமாக கர்நாடக அரசால் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
#Kuvempu #Googledoodle #KuppaliVenkatappaPuttappa