செய்திகள்

டெல்லி ராம்லீலா விழாவில் போலீசாருடன் நடனம் ஆடிய பெண் சாமியார்

Published On 2017-10-05 18:50 GMT   |   Update On 2017-10-05 18:50 GMT
டெல்லியில் ராம்லீலா விழாவுக்கு சென்ற பெண் சாமியாரான ராதே மா விவேக் விகார் போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கு இன்ஸ்பெக்டர் அமரும் இருக்கை அமர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுடெல்லி:

மும்பையை மையமாக கொண்டு இயங்கி வரும் பெண் சாமியாரான ராதே மா, தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். பல்வேறு வழக்குகளில் சிக்கி சர்ச்சைகளின் ராணியாக வலம் வரும் இவர், தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி செய்திகளில் அடிபட்டு வருகிறார்.

டெல்லியில் சமீபத்தில் நடந்த ராம்லீலா விழாவுக்கு சென்ற இவர், போகும் வழியில் விவேக் விகார் போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்குள்ள கழிவறையை பயன்படுத்தினார். பின்னர் அங்கு இன்ஸ்பெக்டர் அமரும் இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் கூப்பிய கரங்களுடன் இன்ஸ்பெக்டர் சஞ்சய் சர்மா நிற்கும் புகைப்படங்களை பின்னர் தனது ‘பேஸ்புக்’ தளத்தில் அவர் பதிவிட்டு இருந்தார்.



பின்னர் ஜி.டி.பி. பகுதியில் நடந்த ராம்லீலா விழாவில் பங்கேற்ற ராதே மா, அங்கு துணை சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசாருடன் நடனம் ஆடினார். இதையும் வீடியோ எடுத்து பேஸ்புக் தளத்தில் வெளியிட்டு இருந்தார். சர்ச்சைக்குரிய சாமியாருக்கு சலுகை வழங்கியும், அவருடன் களியாட்டத்திலும் ஈடுபட்ட போலீசாரின் செயல் உயர் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சய் சர்மா மற்றும் 5 போலீசார் மீது கூடுதல் துணை கமிஷனர் ரேங்க் அதிகாரி ஒருவர் விசாரணையை தொடங்கி உள்ளார். 
Tags:    

Similar News