செய்திகள்
உ.பி.: ஊனமுற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சாமியார் கைது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊனமுற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கோவிந்த் தாஸ் என்ற சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேசம் மாநிலம் பர்சானாவில் ஆசிரமம் நடத்தி வருபவர் பாபா கோவிந்த் தாஸ். இவர் ஒரு ஊனமுற்ற பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் எழுந்தது. பாதிக்கபட்ட பெண் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதுதொடர்பாக மேற்குவங்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு மேற்குவங்கத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அந்தப் பெண் கடந்த சில மாதங்களாக சாமியாரின் ஆசிரமத்தில் தங்கியுள்ளார். அப்போது பல முறை சாமியாரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். அதனால் அந்த பெண் கர்ப்பமானார். இதன்காரணமாக அந்த பெண் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், மேற்குவங்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற அந்த பெண் சாமியார் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரை தொடர்ந்து மேற்குவங்க போலீசார், உள்ளூர் போலீசார் உதவியுடன் ஆசிரமத்திற்கு சென்று சாமியாரை கைது செய்துள்ளனர்.
தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு சாமியார் மறுப்பு தெரிவித்துள்ளார். "எனக்கு எதுவும் தெரியாது. இந்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது. ஒரு நாள் ஒரு தம்பதியினர் இந்த பெண்ணை என்னை பார்த்துக் கொள்ளும்படி இங்கு விட்டு சென்றனர்", என சாமியார் கூறியுள்ளார்.