செய்திகள்

மேற்குவங்கம்: லாட்டரி பணத்திற்காக புளுவேல் விளையாடிய கல்லூரி மாணவனை பத்திரமாக மீட்ட ஆசிரியர்

Published On 2017-09-13 23:09 GMT   |   Update On 2017-09-13 23:09 GMT
மேற்குவங்க மாநிலத்தில் லாட்டரி பணத்திற்காக புளுவேல் ஆன்லைன் சவால்கள் விளையாடிவந்த கல்லூரி மாணவனை அவனது ஆசிரியர் பத்திரமாக மீட்டனர்.
கொல்கத்தா:

தற்கொலை விளையாட்டு என்ற பெயர் பெற்றுள்ள புளூ வேல் (நீல திமிங்கலம்) எனும் ஆன்லைன் கேம், விளையாடுபவருக்கு தினசரி ஒரு பணி என மொத்தம் 50 நாட்கள் வழங்கப்படும். இதன் இறுதி பணி கேமினை விளையாடுவோரை தற்கொலை செய்ய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் சவாலை முடித்ததும் கேமினை விளையாடுபவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணையத்தில் இதுபோன்ற ஆபத்தான கேம்கள் சமூக வலைத்தள உதவியின்றி விளையாட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் பலரும் இந்த கேம் விளையாட துவங்கி, இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்படுகிறது.

இந்தியாவிலும் இந்த விளையாட்டிற்கு பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அடிமையாகி வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த விளையாட்டிற்கு அடிமையான மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பள்ளிமாணவர்களை போலீசார் மீட்டனர்.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவனும் இந்த விளையாட்டிற்கு அடிமையாக இருக்கிறான். இதன் காரணமாக தேர்வில் அவனது மதிப்பெண் குறைந்துள்ளது. இதுகுறித்து அவனது ஆசிரியர் விசாரித்துள்ளார். அப்போது அவன் கதறி அழுதுள்ளான். இதையடுத்து அவனது வகுப்பாசிரியரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.

அவர் நடத்திய விசாரணையில் அந்த மாணவன் புளுவேல் விளையாட்டில் ஈடுபட்டதால் தனது மதிப்பெண் குறைந்ததாக கூறியுள்ளான். அவனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி லாட்டரியில் பரிசு விழுந்ததாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதற்காக அவனது அனைத்து விவரங்களையும் அனுப்பி வைத்துள்ளான். அதைத்தொடர்ந்து, அவன் புளுவேல் சாவால்களை பூர்த்திசெய்தால் அந்த பரிசுத்தொகை அவனது வங்கிக்கணக்கிற்கு அனுப்பிவிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அவன் புளுவேல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளான். அவன் இதுவரை 12 சவால்களை நிறைவேற்றியுள்ளான். 13வது சவாலாக மரத்தில் தலைகீழாக தொங்கியபடி புகைப்படம் எடுத்து அனுப்பவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவன் இந்த சவாலுக்கு மறுப்பு தெரிவிக்கவே அவனது பெற்றோர்களை கொன்றுவிடுவேன் என அவனுக்கு சவால்களை கொடுத்து வருபவர் மிரட்டியுள்ளார். இதையடுத்து அவன் பெரும் மன அழுத்தத்திற்கு ஆழாகி உள்ளான்.

இந்த விசயம் அவனது ஆசிரியர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவனை அழைத்துச்சென்று ஆலோசனை வழங்கிய போலீசார், அந்த மாணவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவனது கைபேசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News