செய்திகள்

16 வயது சிறுமியை 65 வயது ஓமன் பணக்காரருக்கு திருமணம் செய்து வைத்த கொடுமை: தாயார் போலீசில் புகார்

Published On 2017-08-17 08:27 GMT   |   Update On 2017-08-17 08:27 GMT
ஐதராபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, ஓமன் நாட்டைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு திருமணம் செய்து அவருடன் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்:

ஐதராபாத் நவாப் சாகிப் குந்தா பகுதியைச் சேர்ந்த சயீதா உன்னிசா என்பவர் பலாக்னுமா காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

16 வயது நிரம்பிய என் மகளை, என் நாத்தனாரும் அவரது கணவரும் சேர்ந்து ஓமன் நாட்டைச் சேர்ந்த 65 வயது ஷேக் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். இந்த திருமணத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோதும், மதகுரு ஒருவரின் முன்னிலையில் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து திருமணத்தை நடத்தி முடித்தனர். பின்னர் என் மகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து அவருடன் ஓமனுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

என் மகளை 5 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டதாக ஷேக் கூறுகிறார். அந்த தொகையை என் நாத்தனாரின் கணவர் சிக்கந்தரிடம் கொடுத்துவிட்டதாகவும், அந்த தொகையை கொடுத்தால் மட்டுமே இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதாகவும் கூறிவிட்டார். சிக்கந்தரிடம் கேட்டால் மிரட்டுகிறார். எனவே, என் மகளை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும், பலாக்னுமா துணை கமிஷனரை சந்தித்தும் புகார் அளித்த அவர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் தன் மகளை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News