செய்திகள்

சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியா சார்பில் சுதர்சன் பட்நாயக் போட்டியிடுகிறார்

Published On 2017-07-30 10:14 GMT   |   Update On 2017-07-30 10:14 GMT
சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா சார்பில் ஒடிசா மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பங்கேற்கிறார்.
புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று தந்துள்ளார். 2014-ஆம் ஆண்டில் நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. புரி கடற்கரை பகுதியில் மணல் சிற்ப கலைக்காக, மணல் சிற்பக் கலை பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.



இந்நிலையில், சிங்கப்பூரில் சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 28 ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் எண்ணெய் படலங்கள் சூழ்ந்து மாசுபட்டு வருவதை தடுக்கும் வகையில், ’கடலை காப்போம், பூமியை காப்போம்’ என்ற தலைப்பில் இந்த மணல் சிற்ப போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், இத்தாலி, மெக்சிகோ, நெதர்லாந்து, போலந்து, ரஷ்யா, ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து மணல் சிற்ப கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பங்கேற்கிறார்.

கடந்த ஆண்டு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த மணல் சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News