செய்திகள்

கடமையை சரியாக செய்யாத 381 உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை - பணியாளர் மற்றும் பயிற்சி துறை தகவல்

Published On 2017-07-25 11:46 GMT   |   Update On 2017-07-25 11:47 GMT
தங்கள் பணிகளை சரிவர செய்யாத 24 ஐ.ஏ.எஸ். மற்றும் 357 அரசு உயர்நிலை அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பணியாளர் மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பதவியேற்றது. பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, தவறு செய்யும் அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தன்னிடம் தெரிவிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து, அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கோப்பு வடிவில் ‘3 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட மனிதவள முயற்சிகள் : புதிய இந்தியாவின் தொடக்கம்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடியிடம் பணியாளர் மற்றும் பயிற்சி துறை அளித்துள்ளது. அதில் தங்கள் பணிகளை சரிவர செய்யாத அரசு அதிகாரிகளின் விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் உள்ளன.

அவர்கள் அளித்துள்ள தகவல்களின்படி 11,828 குரூப் ‘ஏ’ அதிகாரிகள் மற்றும் 19,714 குரூப் ‘பி’ அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 381 அரசு உயர் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கைக்கு உள்ளானவர்களில் 25 குரூப் ‘ஏ’ அதிகாரிகள் மற்றும் 99 குரூப் ‘பி’ அதிகாரிகள் பதவிக்காலம் முடிவதற்கு முன்கூட்டியே பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளனர்.



பத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட 21 அரசு அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட 37 குரூப் ‘ஏ’ அதிகாரிகள் மீது பதவி நீக்கம், கட்டாய பணிஓய்வு மற்றும் பென்சன் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

எட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட 199 குரூப் ‘ஏ’ அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்தாமல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கடுமையான நடவடிக்கைகள் அதிகாரத்துவத்தில் ஒழுங்குமுறை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது ‘வேலை செய், இல்லையேல் பதவி விலகு’ என்னும் செய்தியை அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளது, அதே நேரத்தில் செயல்திறன் மிக்க பணியிடத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பணியாளர் மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News