செய்திகள்
அன்னிய செலாவணி விதிமீறல்: ஷாருக்கானுக்கு அமலாக்கத் துறை சம்மன்
அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஷாருக்கானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் 20 ஒவர் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமானது ஆகும். இந்த தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளார். இந்த நிறுவனத்தில் ஷாருக்கானின் மனைவி கவுரி மற்றும் நடிகையும் ஷாருக்கானின் தோழியுமான ஜுஹி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மேதா ஆகியோரும் அணியின் உரிமையாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், அன்னிய செலாவணி விதிகளை மீறி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மதிப்பை வேண்டுமென்றே குறைத்து காட்டி அரசுக்கு சுமார் 73.6 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட அணி உரிமையாளர்களுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
ஷாருக்கான் அப்போது அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை. இந்த நிலையில், விதிமீறல் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு ஷாருக்கானுக்கு தற்போது மறுபடியும் சம்மன் அனுப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.