சட்டவிரோத பண பரிவர்த்தனை: கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு
புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகம் உள்பட 14 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 16-ந்தேதி சோதனை நடத்தினர்.
ப.சிதம்பரம் நிதிமந்திரியாக இருந்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீடு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ரூ.305 கோடி முதலீடு கிடைத்தது. இதை ரூ. 4.62 ரூபாயாக குறைத்து காட்ட உதவி செய்ததாகவும், அதற்கு ஆதாயம் பெற்றதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. இந்த சோதனையை மேற்கொண்டது.
இதை கார்த்தி சிதம்பரம் மறுத்து இருந்தார். அதோடு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டினார். சோதனை நடத்திய 2 தினங்களில் நேற்று காலை கார்த்தி சிதம்பரம் திடீரென லண்டன் புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை இன்று வழக்கு பதிவு செய்து உள்ளது. சட்ட விரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து சோதனை நடத்திய நிலையில் அமலாக்கதுறையும் தற்போது வழக்குபதிவு செய்து இருக்கிறது.