செய்திகள்

இந்திய மீனவர்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல் கூடாது - இலங்கை பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்

Published On 2017-04-26 12:34 GMT   |   Update On 2017-04-26 12:34 GMT
இந்திய மீனவர்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தக்கூடாது என இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் மோடி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

ஐந்து நாள் அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் பிரதமர் மோடியை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே உள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து இருதலைவர்களும் பேசினர்.

குறிப்பாக இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகி வரும் நிலையில் மீனவர்களின் விவகாரம் இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பிடித்தது. எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்திய மீனவர்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தக்கூடாது என ரணில் விக்ரமசிங்கேவிடம் மோடி
வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் திட்டத்தை இந்திய மீனவர்கள் செயல்படுத்த இந்திய அரசு மேற்கொண்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இலங்கைக்கு இந்தியா தெரிவித்தது.

சந்திப்பு நிறைவடைந்த பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வணிகம், இயற்கை எரிவாயு தொடர்பான சில ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரையும் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார்.

Similar News