செய்திகள்

மும்பை அருகே ஜெயின் துறவிகள் 2 பேர் லாரி மோதி பலி

Published On 2017-04-23 18:52 GMT   |   Update On 2017-04-23 18:52 GMT
மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் ஜெயின் துறவிகள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
தானே:

மும்பையை அடுத்த தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்தவர் ராஜன் சோப்ரா. இவர் ஜெயின் துறவி. இவர் நேற்று முன்தினம் மாலை மும்பையில் உள்ள ஜெயின் கோவிலுக்கு நிஷா மேத்தா (வயது 52) என்ற பெண் துறவியுடன் நடை பயணமாக வந்தார்.

இவர்கள் மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள டோம்பிவிலி, லோதா டேம் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தனர். அப்போது மும்பை நோக்கி வந்த லாரி ஒன்று ரோட்டின் ஓரமாக சென்ற ஜெயின் துறவிகள் 2 பேர் மீதும் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 துறவிகளும் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தனர்.

இந்த விபத்து நடந்த உடனே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த ஜெயின் துறவிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், துறவிகள் 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.  

Similar News