செய்திகள்

கேரளாவில் 70 வயது மூதாட்டியை கற்பழித்த கம்யூனிஸ்டு நிர்வாகி கைது

Published On 2017-04-05 05:44 GMT   |   Update On 2017-04-05 05:44 GMT
கேரள மாநிலத்தில் 70 வயது மூதாட்டியை கற்பழித்த ஆளுங்கட்சியை சேர்ந்த கம்யூனிஸ்டு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பள்ளி சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை இந்த கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனாலும் இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. கண்ணூர் அருகே இருட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டி ஒருவர் கற்பழிக்கப்பட்டார்.

இதனால் அவமானம் அடைந்த அந்த மூதாட்டி தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலமே அவர் கற்பழிக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது இருட்டி பகுதி கம்யூனிஸ்டு கட்சியின் பொறுப்பாளரான ராஜீவன் (வயது 46) என்பவர் அந்த மூதாட்டியை கற்பழித்தது தெரியவந்தது. கற்பழிப்பு நடந்த வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர், சிறுமிகள் அளித்த தகவலின் அடிப்படையில் ராஜீவனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில்தலை மறைவாக இருந்த ராஜீவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மூதாட்டியை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் கற்பழிப்பின்போது அந்த மூதாட்டி அவருடன் போராடியதால் ராஜீவனின் உடலில் நக கீறல் காயங்கள் ஏற்பட்டு இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதைதொடர்ந்து ராஜீவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். கற்பழிப்பு வழக்கில் ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவரே கைது செய்யப்பட்டு உள்ளதால் எதிர்கட்சிகள் மாநில அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் மகளிர் அமைப்பினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

Similar News