செய்திகள்

பெங்களூரு- மங்களூரு இடையே புதிய ரெயில் விரைவில் இயக்கப்படும்: மத்திய மந்திரி சுரேஷ்பிரபு தகவல்

Published On 2017-03-27 04:56 GMT   |   Update On 2017-03-27 05:03 GMT
பெங்களூரு-மங்களூரு இடையே ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என மத்திய மந்திரி சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் பெங்களூரு - ஹாசன் இடையேயான புதிய ரெயில் சேவை (இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்) தொடக்க விழா நடந்தது. விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு பேசியதாவது:-

பெங்களூருவில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறநகர் ரெயில் சேவையை தொடங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இதற்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தை வழங்க கர்நாடக மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது. எனவே பணிகள் மே மாதத்தில் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூரு-மங்களூரு இடையே ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும். அந்த ரெயிலுக்கு ஹோமட்டேஸ்வரா எஸ்பிரஸ் என்று பெயரிடப்படும். இதனால் பயண நேரம் குறையும்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு வழித்தட ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

548 கிலோ மீட்டர் ரெயில்பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

92 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அனைத்து ரெயில்வே திட்டங்களையும் படிப்படியாக தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம். தேசிய அளவில் புதிய ரெயில் பாதைகள், ரெயில் நிலையங்கள், அடிப்படை கட்டுமான வசதி உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் செய்து தரப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் பெங்களூரு- மும்பை இடையேயான ரெயில்பாதை இருவழி பாதைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, மத்திய மந்திரி அனந்தகுமார், கர்நாடக மந்திரிகள் தேஸ்பாண்டே, மஞ்சு, மாநகராட்சி மேயர் பத்மாவதி, எம்.பி.க்கள் முனியப்பா, வீரப்ப மொய்லி, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News