செய்திகள்

உத்தரகாண்ட் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் திரிவேந்திர சிங் ராவத்

Published On 2017-03-17 13:33 GMT   |   Update On 2017-03-17 13:33 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிவேந்திர சிங் ராவத், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், பா.ஜ.க. 57 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதர கட்சிகள் 2 இடங்களை பெற்றது. இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளைத் தொடங்கியது பா.ஜ.க.  

இந்நிலையில், பா.ஜ.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று டேராடூனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரிவேந்திர சிங் ராவத் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, திரிவேந்திர சிங் ராவத் ஆளுநர் கே.கே.பாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், தனக்கு 57 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பது தொடர்பான கடிதத்தையும் வழங்கினார். அவருடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர்களும் ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர்.

ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்ததும், உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக நாளை (18-ம் தேதி) திரிவேந்திர சிங் ராவத் பதவி ஏற்கவுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளதாக மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News