செய்திகள்

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் மகளின் பிணத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற தந்தை

Published On 2017-02-21 06:49 GMT   |   Update On 2017-02-21 06:49 GMT
கர்நாடக மாநிலத்தில் இறந்துபோன மகளின் சடலத்தை கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காததால், இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள கோடிஜெனஹள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில், திம்மப்பா என்பவரின் 20 வயது மகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவரது நிலைமை மோசமடையவே, அங்கிருந்து நேற்று மேல் சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் இறந்து போனார்.

அவரது சடலத்தைக் கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தருமாறு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டார் திம்மப்பா. ஆனால் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. எனவே, வாடகை டாக்சியில் சடலத்தை கொண்டு செல்லும்படி அங்கிருந்தவர்கள் யோசனை கூறினர். ஆனால், கையில் போதிய பணம் இல்லாததால் வாடகை காரையும் அவரால் ஏற்பாடு செய்ய முடியவில்லை.



எனவே வேறு வழியின்றி திம்மப்பா தனது மகளின் பிணத்தை, தெரிந்த நண்பர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் வைத்து வீட்டுக்கு எடுத்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News