செய்திகள்

மானிய விலையில் லட்டு பிரசாதம்: திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.140 கோடி இழப்பு

Published On 2017-02-20 04:50 GMT   |   Update On 2017-02-20 04:50 GMT
திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு இலவசம் மற்றும் மானிய விலையால் ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.140 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் திருப்பதியில் புகழ்பெற்ற வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. திருமலையில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இதற்காக திருமலையில் ராட்சத சமையலறை அமைக்கப்பட்டு உள்ளது.

சுமார் 11 கி.மீ. தூர மலைப்பாதையை கால்நடையாக கடந்து வருவோருக்கு தலா ஒரு லட்டும், ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் ரூ.500 வி.ஐ.பி. தரிசனத்தில் வருவோருக்கு தலா 2 லட்டுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இலவச தரிசனம் மற்றும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்போருக்கு மானிய விலையாக ரூ.10-க்கு லட்டு வழங்கப்படுகிறது.

அத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு இந்த இலவசம் மற்றும் மானிய விலையால் ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் லட்டு தயாரிப்பு மூலம் ரூ.140 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News