செய்திகள்

பெங்களூருவில் பலூனுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து 4 பேர் காயம்

Published On 2017-01-28 05:14 GMT   |   Update On 2017-01-28 05:14 GMT
பெங்களூருவில் பலூனுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:

பெங்களூரு மாநகரில், வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவர் பலூன் வியாபாரி ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அவர் தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு, பலூனுக்கு காற்று நிரப்பும் சிலிண்டரையும் வைத்து, தனது இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்றார்.

இந்நிலையில், வசந்த நகர் 8-வது குறுக்கு தெருவில் அவர் சென்றபோது, வண்டியில் இருந்த சிலிண்டர் சூடானதால், டூவீலரை ஓரமாக நிறுத்தி, சிலிண்டர் மீது தண்ணீர் தெளித்தார். அப்போது திடீரென்று, சிலிண்டர் வெடித்தது. இதில், முகேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, பெளரிங் ஆஸ்பத்திரிக்கு, சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், அருகில் இருந்த மருந்து கடை உரிமையாளர் யுவராஜ், கடைக்கு வந்திருந்த லட்சுமிதேவம்மா என்ற பெண் மற்றும் அந்த வழியாக நடந்து சென்ற அம்முஸ்ரீ என்ற பெண் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டு, அவர்கள் மகாவீர் ஜெயின் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

Similar News