செய்திகள்

சாலக்குடி அருகே போலி சொத்து ஆவணம் தயாரித்த ஓய்வு பெற்ற தாசில்தார் கைது

Published On 2017-01-23 07:01 GMT   |   Update On 2017-01-23 07:01 GMT
சாலக்குடி அருகே போலி சொத்து ஆவணம் தயாரித்த ஓய்வு பெற்ற தாசில்தாரை வருவாய் துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் சாலக்குடி பகுதியில் சொத்து ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்படுவதாக வருவாய் துறையினருக்கு புகார்கள் வந்தது.

இது தொடர்பாக உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, வருவாய்த்துறையினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் சொத்து ஆவண சான்றிதழ்கள், ரசீதுகள், அடையாள முத்திரைகள் எங்கு தயாரிக்கப்படுகிறது என்றும் விசாரித்தனர்.

இதில், ஓய்வு பெற்ற தாசில்தார் மோகன்தாஸ் (வயது 61) என்பவர் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வருவாய் அதிகாரிகள் சாலக்குடி அருகே பெரும்பூர் பகுதியில் உள்ள மோகன்தாஸ் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அங்கு போலி ஆவணங்கள், ரசீதுகள் மற்றும் அடையாள முத்திரைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் மோகன்தாசையும் பிடித்து சாலக்குடி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் மோகன்தாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான மோகன்தாஸ், கடந்த 2011-ம் ஆண்டு கண்ணூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News