செய்திகள்

'சென்னையிடமிருந்து கத்துக்குங்க டெல்லி' தமிழக இளைஞர்களைப் பாராட்டிய வட இந்திய பெண்

Published On 2017-01-20 14:35 GMT   |   Update On 2017-01-20 14:35 GMT
பெண்களை மதிக்கும் விஷயத்தில் சென்னையிடமிருந்து டெல்லி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என வட இந்திய பெண் ஒருவர் பாராட்டியிருக்கிறார்.
புது டெல்லி:

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் இளைஞர்கள் நான்காவது நாளாக போராடி வருகின்றனர். குறிப்பாக இந்த இரவு நேரத்திலும் செல்போன் ஒளியில் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை களத்தில் குதித்துள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக இன்று வியாபாரிகள் கடையடைப்பு செய்தும், 1௦-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சமடைந்துள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்களின் போராட்டத்திற்கு தேசிய ஊடகங்களும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

இந்நிலையில் பெண்களை மதிக்கும் விஷயத்தில் சென்னையிடமிருந்து டெல்லி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என என்டிடிவி செய்தி நிர்வாக இயக்குநர் சோனியா சிங் பாராட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது இதைத்தான். கடற்கரையில் நூற்றுக்கணக்கான ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் எந்தவித பாலியல் அச்சமுமின்றி தங்கியிருக்கிறார். இந்த விஷயத்தில் டெல்லி சென்னையிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

இவரது இந்த பதிவு தற்போது ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

Similar News