செய்திகள்

பிக்னிக் சென்றபோது பரிதாபம்: கார் விபத்தில் 8 வாலிபர்கள் பலி

Published On 2017-01-16 09:08 GMT   |   Update On 2017-01-16 09:08 GMT
மேற்கு வங்காளம் மாநிலத்தில் பிக்னிக் சென்றுவிட்டு சில நண்பர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த காரின்மீது வேன் மோதிய விபத்தில் 8 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொல்கத்தா:

சங்கராந்தி பண்டிகையையொட்டி, மேற்கு வங்காளம் மாநிலம், நாடியா மாவட்டத்தை சேர்ந்த இளம்வயது நண்பர்கள் சுமார் 20 பேர் அருகாமையில் உள்ள பெத்துவாடோஹோரி காட்டுப் பகுதியில் உல்லாசமாக பொழுதை கழிக்க பிக்னிக் சென்றனர்.

காட்டுப் பகுதியில் தங்கியிருந்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்த அவர்கள் ஒரு சொகுசு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். 34-வது தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வேகமாக வந்த வேனின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 8 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, உயிரிழந்தனர். படுகாயமடைந்த பத்துக்கும் அதிகமானவர்கள் சக்திநகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ள நிலையில் இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Similar News