செய்திகள்

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல்: அகிலேஷ் கூட்டணியில் காங்கிரசுக்கு 100 தொகுதிகள்

Published On 2017-01-16 06:56 GMT   |   Update On 2017-01-16 09:19 GMT
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் அகிலேஷ் யாதவுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து 100 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

403 தொகுதிகள் கொண்ட நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருக்கிறார். அங்கு சட்டசபை தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 11-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதிவரை 7 கட்டமாக நடைபெறுகிறது.

இதற்கு முன் 2012 சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தது. தற்போது சமாஜ்வாடி கட்சியில் முலாயம்சிங் யாதவுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி சேர காங்கிரஸ் முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தியது. சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவ் அணியுடன் காங்கிரஸ் கூட்டணி சேருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மொத்தம் உள்ள 403 தொகுதியில் காங்கிரஸ் 100 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளது. பேச்சு வார்த்தையின் போது 100 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த 100 தொகுதிகளில் மற்றொரு கூட்டணி கட்சியான அஜீத்சிங்கின் லோக் தளம் கட்சிக்கு காங்கிரஸ் தான் தனக்குள்ள தொகுதிகளை ஒதுக்கி தரவேண்டும் என்று பேச்சு வார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டது.

விரைவில் கூட்டணி அறிவிப்பு அதிகாரப் பூர்வமாக வெளியாகிறது.

Similar News